கிபி 13 ஆம் நூற்றாண்டில் இருந்து கிபி 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நல்லூரை தலைநகராக கொண்டு யாழ்ப்பாண இராசதானி தோற்றம் பெற்றது. பாளி , சிங்கள, தமிழ் இலக்கியங்கள் , இலங்கை தென்னிந்திய கல்வெட்டுக்கள், போத்துக்கேய ஆவணங்கள் என்பன இவ்வரசு பற்றி அறிய உதவுகின்றன. 350 ஆண்டுகள் நல்லூரை தலைநகரமாக கொண்டு வட இலங்கையில் ஆட்சி புரிந்துள்ள போதிலும் அதன் வரலாற்றை முழுமையாக அறியக் கூடிய சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை. இவ்வரசு பற்றி சிங்கள , தமிழ் இலக்கியங்களில் சில செய்திகள் காணப்பட்டாலும் அவை யாழ்ப்பாண மன்னர்களின் வரலாற்றை காலநிரைப்படுத்தி கூற உதவவில்லை.
ஓரிரு கல்வெட்டுக்கள் கிடைத்துள்ள போதிலும் அவை விரிவான தகவல்களை தரவில்லை. ஆனால் அரசு ஒன்று நீண்டகாலமாக ஆட்சி புரிந்ததையும் அது அரசியல், பொருளாதார, பண்பாடு , உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தக தொடர்புகள் போன்றவற்றால் மேம்பட்டு இருந்ததையும் ஓரளவுக்கு எடுத்துக்காட்டும் சான்றுகளில் ஒன்றாக இவ்வரசு கால மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள் விளங்கியுள்ளன. அவையாவன சேது நாணயங்கள் , கந் என்று பெயர் பொறித்த நாணயம், ஆ என்று எழுத்து பொறித்த நாணயம்.
இந்நாணயங்கள் இலங்கையிலும் , தமிழகத்திலும் கிடைத்து வருகின்ற போதிலும் எண்ணிக்கையில் அதிகமாக வட இலங்கையில் திருநெல்வேலி, நல்லூர், கோப்பாய், அச்சுவேலி, புத்தூர், சண்டிலிப்பாய், மாதோட்டம், மாங்குளம், பூநகரி போன்ற பல இடங்களில் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவற்றின் மூலமாக யாழ்ப்பாண மன்னர்கள் நாணயங்களை வெளியிட்டதை அறிய முடிகின்றது.
Pages
▼
Pages
▼
No comments:
Post a Comment